கோவை மாவட்ட பா.ஜ.க., தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட இரு பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்ட பா.ஜ.க., தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட இரு பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க., தேசிய செயலர் எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த சர்ச்சை கருத்திற்கு பிறகு, கடந்த 7-ம் தேதி பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டிலும் அவரது காரை பெட்ரோலை ஊற்றி தீ பற்றவைத்துள்ளனர்.

அதேபோல, செல்வபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் உமாபதி என்பவர் வீட்டிலும் சுமார் 4.30 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் உமாபதியின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் சேதமடைந்தது. அதிகாலை என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு சம்பவமும் ஒரே நபர்களாக இருக்குமோ என்ற கோணத்தில் பீளமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைத்ததின் எதிர்வினையாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது:- பா.ஜ.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசபட்டதை அடுத்து தற்போது எனது வீட்டில் நடந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜனிடம் பேசியுள்ளோம். அவர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இந்த பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.