ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை சார்பில் நலிவடைந்த ஆதரவற்ற பெண்களுக்கு 40 தையல் மெஷின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை சார்பில் நலிவடைந்த ஆதரவற்ற பெண்களுக்கு 40 தையல் மெஷின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

லிபாஸ் தையல் பயிற்சி மையம் மூலம் மத்திய அரசின் சான்றிதழுடன் இலவச தையல் பயிற்சியை ஜமாஅத்தே வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூகத்தில் நலிவடைந்த 40 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. இதில், கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் தலைவர் ஜனாப். பி.எஸ். உமர் பாரூக் கலந்து கொண்டு அவற்றை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கடந்த 70 ஆண்டுகளாக ஜமாஅத்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. ரூ. 20-க்கு மருந்துகளுடன் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. விளம்பரங்கள் இல்லாமல் பல சமூக சேவைகளை செய்து வருகிறோம், என்றார்.

கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை பிரிவின் துணை மாவட்ட ஆட்சியர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "சிறுபான்மையினர் நலத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதை கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தாட்கோ மூலம் தொழில் தொடங்கக் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது," இவ்வாறு பேசினார்.