பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை : பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடு முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில், பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது. இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் வி.எல்.பி., கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கல்லூரியின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரியா வாரியரை போல கண் ஜாடை செய்யும் மாணவிகள், ஒருவருடம் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், பிரியா வாரியரைப் போல கண்வித்தைக் காட்டும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற தகவலுக்கு வி.எல்.பி. கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டுப் பானங்கள் கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்யப்படாது என்றும், புத்துணர்வு பானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையைத் திரித்து தவறான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.