பல்லடம் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்குச் சொந்தமான பஞ்சு குடோன் மற்றும் நூற்பாலை அப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திடீரென இயந்திரத்தில் தீ பிடித்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். மேலும், பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து அவினாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.