கோவை அரசு மருத்துவமனையில் ஏழை பெண்களின் நலன் கருதி நிறுவப்பட்டுள்ள நாப்கின் இயந்திரங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், அது பயன்பாடற்று கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஏழை பெண்களின் நலன் கருதி நிறுவப்பட்டுள்ள நாப்கின் இயந்திரங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பயன்பாட்டிற்கு நாப்கின் இயந்திரம் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் ரூ. 5-ஐ செலுத்தி நாப்கின்களை எடுத்துக்கொள்ளலாம். இந்த இயந்திரம் தாய் - சேய் பிரிவு மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி விடுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, சுகாதாரத்தைப் பாதுகாக்கும் விதத்தில் நாப்கின் இயந்திரம் வைத்த இடத்தின் அருகிலேயே அதை அழிக்கும் இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரம் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏழை தாய்மார்கள்
கோவை அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலான ஏழ்மை நிலையில் உள்ள பெண்களே வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பணப் பற்றாக்குறையால் பாடாய்படும் பெண்கள் அதிக ரூபாய் கொடுத்து நாப்கின் வாங்க முடியாத சூழலையும் இங்கு காண முடிகிறது. இந்த நிலையில், தாய் - சேய் பிரிவில் நாப்கின்களின் தேவை அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்ப அரசின் இலவச நாப்கின் வழங்கப்படுகிறது.
வரவேற்பு
இந்த நாப்கின் இயந்திரம் கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் பள்ளியில் உள்ள விடுதியிலும், செவிலியர்களின் பயன்பாட்டிற்காகப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விடுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த நாப்கின் இயந்திர பயன்பாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாப்கின் இயந்திர பயன்பாடு குறித்து நர்சிங் ஆசிரியர் ஜோஸ் கூறுகையில், "இந்த விடுதியில் முதலில் நாப்கின்களை பயன்படுத்தி கண்ட இடங்களில் போடும் அவலம் இருந்தது. இங்கு போதிய சுகாதார பணியாளர்கள் இல்லாததால் குப்பை கொட்டும் இடம் போல் சுகாதாரமற்று இருந்தது. ஆனால், இந்த இயந்திர முறை வந்ததில் இருந்து தூய்மையாக உள்ளது. மேலும், மாணவிகள் முறையாகப் பயன்படுத்தி அதை சுகாதாரமாக அழித்துவிடுகின்றனர்." என்றார்.

விழிப்புணர்வு
நாப்கின் இயந்திரம் தாய் - சேய் மருத்துவப் பிரிவில் போதிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. அரசின் சார்பில் தாய்மார்களுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது. இதனால், அந்த பிரிவில் நாப்கின் பயன்பாடு குறைவாக உள்ளது. இருப்பினும், மருத்துவமனையின் மற்ற வார்டுகளில் இருக்கும் நோயாளிகளும், நோயாளிகளுடன் உதவிக்கு வரும் பெண்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாப்கின் இயந்திரம் குறித்து மேலும், விழிப்புணர்வு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக இருப்பிட மருத்துவ அலுவலர் செளந்திரவேல் கூறுகையில், "சமீபத்தில் நமது அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள நாப்கின் இயந்திரம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாப்கினோடு அதை அழித்தொழிக்கும் இயந்திரமும் இருப்பது சுகாதாரமாக உள்ளது. இதன் பயன்பாடு குறித்து தாய் - சேய் பிரிவில் உள்ள ஆலோசகர்கள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 1,000 மதிப்புடைய “அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம்” வழங்கப்படுகிறது. அதிலும், நாப்கின்கள் உள்ளன. இது தீரும் பட்சத்தில் கடைகளில் தாய்மார்கள் நாப்கின்கள் வாங்குகின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்கு எளிமையாகக் கிடைக்க மருத்துவமனைக்குள்ளேயே இயந்திரங்களை வைத்துள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.
ஏழ்மையாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பெரும்பாலான ஏழை, எளிய பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. பழைய கிழிந்த துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். என்னதான் நம் நாடு டிஜிட்டலாக மாறிவந்தாலும் இன்னும் பல கிராமங்களில் பழைய கிழிந்த துணிகளின் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெண்களுக்கே உண்டான துயரத்தில் பங்கு கொள்வது நாப்கின் என சொல்லலாம். அந்த வகையில், தற்போது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நாப்கின்களை ஏழை பெண்கள் அனைவரும் உபயோகிக்கலாம் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.