விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்கடம் காவல் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதியளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தால் பரபரப்பாக காணப்படும் உக்கடம் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதே போல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.டி.பி.ஜ கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ரத யாத்திரைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
