குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி
கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய கே.சி.பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் தினமும் ஆர்ப்பாட்டம் செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தருமென்ற நம்பிக்கை இல்லை என கூறினார். அதிமுக விதிப்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையை மாற்ற பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும், அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஒபிஎஸ், இபிஎஸ் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர் என கூறியவர்.
சசிகலாவை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென்பதே தர்மயுத்ததின் நோக்கம் என்ற ஒ.பன்னீர்செல்வம், ஏன் இதுவரை சசிகலா நீக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் எனவும், ஒபிஎஸ்-யை நம்பி இலட்சக்கணக்கான தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கே.சி.பழனிசாமி கூறினார்.
இதன் பின்னர் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி பேசுகையில் எந்த புகாரும் குற்றச்சாட்டும் தன் மீது இல்லை எனவும், அண்ணா தொழிற்சங்கத்தில் செய்த செலவுகளுக்கு கணக்கு உள்ளது எனவும் கூறிய சின்னசாமி, 10 இலட்ச ரூபாய் கையாடல் என்பது அபாண்டமான புகார் என தெரிவித்தார். மேலும் மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்தவர். டிடிவி தினகரனுடன் அணிக்கு செல்வேன் என அவர் தெரிவித்தார்.