காவிரி மட்டுமல்லாது, கோதாவரியும் தமிழகத்திற்கு வரும் என்றும், அதுவே பா.ஜ.க.வின் திட்டம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை: காவிரி மட்டுமல்லாது, கோதாவரியும் தமிழகத்திற்கு வரும் என்றும், அதுவே பா.ஜ.க.வின் திட்டம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
திருப்பதியில் பணம் எண்ணுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ப.சிதம்பரம் கருத்து கண்டனத்திற்குரியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இதனை பா.சிதம்பரம் கொச்சைப்படுத்த வேண்டாம். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தெரியாதவரா பா.சிதம்பரம்? மூன்று மாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து இந்தியா மீண்டு இருக்கிறது.
பணத்தை எண்ண அதிக அனுபவம் வேண்டும் என்றால், திகார் சிறையில் உள்ள கார்த்திக் சிதம்பரத்திடம் கொடுத்து எண்ணச் சொல்லலாம். பா.ஜ.க. அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுவது தவறு. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஏன் ஆதரிக்க வேண்டும். மேலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை?
கோதாவரி
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பணிகளை தொடங்கிவிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. கால அவகாசம் முடியும் வரை காத்திருப்பது என்ற தமிழக அரசின் முடிவு சரியானது. 29-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்ற துணை முதலமைச்சரின் கருத்து எதார்த்தமானது. காவிரி மட்டுமல்ல, கோதாவரியும் தமிழகம் வரும். அது தான் பா.ஜ.க.வின் திட்டம்
ராகுல் காந்தி
அழகிய தமிழ் மொழி பற்றி பேசும் ராகுல் காந்தி, தமிழ் மக்களுக்கு வஞ்சனை இன்றி தண்ணீரை திறந்து விடுங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஏன் கூறவில்லை. காங்கிரஸ் இந்த பிரச்சினையில் அரசியல் நாடகம் ஆடுகிறது. தமிழ் மொழி பேசி இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றதும், மொழிப்போர் தியாகிகளை கொன்றதும் காங்கிரஸ் கட்சி தான். இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதை தடுக்காத ராகுல் காந்தி அரசியல் பிழைப்பிற்காக தமிழ் மொழி குறித்து பேசுகின்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.