திருப்பூரில் வாடகை காரை பயன்படுத்தி ஆடுகளை திருடும் மர்ம கும்பலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஊரக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் வாடகை காரை பயன்படுத்தி ஆடுகளை திருடும் மர்ம கும்பலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஊரக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில் என்பவர் ஆடுகளை வளர்த்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதியன்று இரவு தனது வீட்டின் முன்பகுதியில் 3 ஆடுகளைக் கட்டி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார் பின்னர், மீண்டும் வழக்கம்போல் காலையில் எழுந்து வந்து பார்த்த போது, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் தெரியாத நிலையில், இது குறித்து உடனடியாக திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊரக காவல்துறையினர் தீவிர மேற்கொண்டனர்.
இதனிடையே, செந்தில் வீட்டருகே உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருத்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத 3 நபர்கள் வாடகை காரில் அப்பகுதிக்கு வந்து முதலில் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்து மீதமிருந்த ஒரு ஆட்டையும் திருடி காரில் ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடு திருடும் கும்பல் குறித்தும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகை கார் பற்றியும் திருப்பூர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.