கோவை மாநகராட்சி வார்டு எண்-73 க்கு உட்பட்ட பந்தயசாலை வளாகத்தில், காஸ்மோ பாலிட்டன் கிளப் அருகே அமைந்துள்ள உடற்பயிற்சி கூடம், மாநகராட்சி ஊழியர்களால் இன்று (வெள்ளிகிழமை) சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாநகராட்சி வார்டு எண்-73 க்கு உட்பட்ட பந்தயசாலை வளாகத்தில், காஸ்மோ பாலிட்டன் கிளப் அருகே அமைந்துள்ள உடற்பயிற்சி கூடம், மாநகராட்சி ஊழியர்களால் இன்று (வெள்ளிக்கிழமை) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சுமார் 40 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக செயல்பட்டுவரும் இந்த உடற்பயிற்சி நிலையத்தை, பொதுமக்களே பராமரித்தும் வருகின்றனர்.
இப்பகுதியில் நடைபயிற்சி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தினமும் இங்கு வந்து இலவசமாக உடற்பயிற்சி செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில், மாநகராட்சி ஊழியர்கள், காவலர்கள் பாதுகாப்போடு, இயந்திரங்களை கொண்டு உடற்பயிற்சி கூடத்தின் ஒரு பகுதியை இடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள், மாநகராட்சி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டபோது, ஆபத்தான ஆயுதங்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால், இடிப்பதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து உடற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த சிவகுமார் கூறியதாவது, 'இலவசமாக இயங்கி வரும் இந்த உடற்பயிற்சி கூடத்தில், தினம்தோறும் காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்வதற்காக, ஏராளமான இளைஞர்களும், முதியவர்களும், குழந்தைகளும் வந்து செல்கின்றனர். அப்படி நீண்டகாலமாக பயன்படுத்துவோர், உடற்பயிற்சி சாதனங்களை நன்கொடையாக வழங்குவதுண்டு. ஆனால் சிலர், பணமாக நண்கொடை வசூல் செய்யத் தொடங்கினர். அவர்களை கண்டித்து வெளியேற்றினோம். அவர்கள் இன்று அரசியல் பலத்தை பயன்படுத்தி, இங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான புகாரளித்து உடற்பயிற்சி கூடத்தை இடித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி மத்திய மண்டல, உதவி ஆணையரிடம் புகாரளித்துள்ளோம்' என்றார்.