நீலகிரி மாவட்டம் உதகையில் இயற்கை மற்றும் இயற்கை உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையோடு இணைந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இயற்கை மற்றும் இயற்கை உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையோடு இணைந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கையான உணவு பழக்க வழக்கத்தைக் கொண்டு வருவதற்காக நாடெங்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியரிடையே சிறு வயது முதலே இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை அறிவு, பிளாஸ்டிக் இல்லா பகுதி, இயற்கை உரம் தயாரிப்பு, அதிக எண்ணிக்கையில் சோலை மரங்கள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு, மின் சிக்கனம், பறவைகள் பாதுகாப்பு என பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, இயற்கையோடு இணைந்த பள்ளிக்கூடத்தை உருவாக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும், சுற்றுச்சூழல் துறை சார்பாக மாவட்டங்கள் தோறும் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து மரம் வளர்க்கவும், இயற்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியை இயற்கையோடு இணைந்த பள்ளிக்கூடமாக தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி நடவு செய்து, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கம்பு, ராகி, சோளம், தினை போன்ற இயற்கை உணவுகளைப் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை பாதுகாப்பு குறித்த உரை நிகழ்த்தினர். மேலும், அழிவின் பட்டியலில் உள்ள சிட்டுக்குருவிகள் இந்தப் பள்ளி வளாகத்தில் கூடுகள் அமைத்து பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.
