தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
ஏப்ரல் 20-ம் தேதிவரை நடைபெறும் இந்த தேர்வினை தமிழகத்தில் மட்டும் சுமார் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 36 ஆயிரத்து 649 பேர் தனித் தேர்வர்கள். இதற்காக, 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 305 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 820 மாணவர்கள், 8 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 514 பேர் எழுதுகின்றனர். புதுச்சேரியில் 38 மையங்கள், காரைக்காலில் 13 மையங்கள் என மொத்தம் 52 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களைக் கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும், காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களாக மட்டும் 991 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.