இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
கோவை: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
கோவை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளை சந்திக்க மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா இன்று கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலையை எதிர்பார்த்து இருந்த நிலையில் ரிஸ்வான் என்பவர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ரிஸ்வானின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை மத்திய சிறையில் இரண்டு பேர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளனர். மேலும், இருவர் மன உளைச்சல் காரணமாக மரணித்துள்ளனர். மத்திய சிறையில் கைதிகளுக்கு தரமான மருத்துவ வசதி மட்டுமல்லாமல் கைதிகள் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப் பட வேண்டும். குற்றவாளிகள் எந்த வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கடந்து பாரபட்சம் பாராமல் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.