'காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இதற்குமட்டுமல்ல, அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்" என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை : 'காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இதற்குமட்டுமல்ல, அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்" என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறியதாவது :-
குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உணர்ச்சி வசப்பட்டு மருத்துவர்களின் பணிகளுக்கு குறுக்கே நிற்க வேண்டாம். இந்த நிகழ்வை ஒரு கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர் காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது. வரும் காலத்தில் வனத்திற்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அங்கு நேரில் சென்று அரசின் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை.
தற்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவை முதலுதவி சிகிச்சை தான்.
இந்த விபத்தில் யாரையும் குறைகூற முடியாது. அரசின் முதலுதவி செயல்பாடுகள் சரியாகத் தான் உள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சரியாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு வார காலமாக காட்டுத் தீ எரியும் போது மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் சென்றது சரி அல்ல.
காவிரி
காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். இதை தீர்க்க முடியாத பிரச்சனையாக ஆக்கியிருக்கத் தேவையில்லை. விவசாயிகளுக்கு மட்டுமல்ல தண்ணீர் சேமிப்பை அனைத்து மக்களும் கற்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக வரும் காலத்தில் நிச்சயம் கேரள முதல்வருடன் பேசுவேன். எனது சுற்றுப் பயணத்தின் போது மக்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி
காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே? என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு "இதற்குமட்டுமல்லாமல் அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்." என்று கமல் கூறியுள்ளார்.