கேரள அரசு தடுப்பணை கட்டினால் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை : கேரள அரசு தடுப்பணை கட்டினால் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆனைகட்டி பகுதியில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "கேரள அரசு சோலையூர் குடப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி, கேரள அரசால் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்றுவோம். மேலும், கேரள அரசு தடுப்பணை கட்டினால் 60 ஆண்டு கால கனவுத் திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதனால் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி என நான்கு மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்படையும். நான்கு மாவட்டங்கள் குடிநீர் வசதி இல்லாமல் பாலைவனமாகும்.
எனவே, அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு, கேரள முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்." என்றார்.
தொடர்ந்து, கேரள எல்லையை முற்றுகையிடச் சென்றபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்பு மணி ராமதாஸ், மற்றும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே மணி மற்றும் கட்சி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.