கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.
கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.
தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது. போலியோ நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்காக தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கோவையில் புரூக்பாண்ட் சாலையில் உள்ள சீத்தலட்சுமி மகப்பேறு மையத்தில் நடந்த இம்முகாமில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். கோவையில் 33 மாநகராட்சி நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள், 45 பள்ளிகள், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுவருகிறது.
இப்பணியில் சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் என 1404 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,61,787 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 49 மருத்துவ அலுவலர்கள் இப்பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த முகாமை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் 30 முக்கிய சுற்றுலா தலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொபைல் வாகனங்கள், பேருந்து நிலையம், இரயில் நிலையம், மார்க்கெட் சோதனை சாவடிகள், 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் 6 மசூதிகளில் சொட்டு மருந்து மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "சொட்டு மருந்து முகாமிற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட முகாமில் மாவட்டம் முழுவதும் 45,096 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்." என்றார்.