கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கோவை : கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சங்கமம் ஒயிலாட்ட குழு கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினரின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா கணியூரை அடுத்த கொள்ளுபாளையம் மணியகாரர் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவை காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் மக்களிடம் பேசுகையில், "மறந்து போன கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் கலை குழுவினருக்கு வாழ்த்துக்கள். மூன்று தலைமுறையினர் பங்கேற்கும் இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டும்." என்றார்.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு வயதுடையோர் மேள இசைக்கு ஏற்றபடி ஆடிய ஒயிலாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

இது குறித்து சுசித்தரா என்ற மாணவி கூறுகையில், " முதலில் இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியைக் காண சென்றேன். அதன்பிறகு இந்த கலையால் ஈர்க்கப்பட்டு குழுவில் இணைந்து கடந்த 8 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தேன். தற்போது ஒயிலாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளேன்." என்றார்.
இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 50 பேரின் அரங்கேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.