நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியின் உள்பகுதியில் ஓம் பெட்டா, கேம் அட் ஆகிய இடங்களில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் இருப்பினும், ஒரு சில குளங்கள் நீரின்றி வற்றி போயுள்ளன. வனத்துறையினர் விலங்குகளின் தேவைக்காக தினம்தோறும் இந்தக் குளங்களில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கார்குடி சரகத்துக்கு உட்பட்ட நெல்லிக்கரை பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ஆர். ரெட்டி, சரகர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் அங்கு சென்று யானையை ஆய்வு செய்தனர். வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து தந்தங்களை நீக்கிய பின் யானையின் உடலை வன விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, "யானை இறந்து 10 தினங்கள் ஆகியிருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருந்தது. வனவிலங்குகள் யானையின் உடலை தின்றிருந்தன. சுமார் 15 வயதுக்கு உட்பட்ட ஆண் யானை உணவு நீர் உண்ணாமல் வறட்சியின் காரணமாக இறந்துள்ளது" என்றனர்.