'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.
கோவை: 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமண தொழிலில் சாதனை படைத்த திருமண திட்டமிடல், அலங்காரம், சமையல், ஆடை வடிவமைப்பு, போட்டோகிராபர் மற்றும் மெகந்தி போடுபவர்கள் போன்ற 9 வகையான துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த பெண்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் உலக அழகி ஜெயா மகேஷ், பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் அனுஷா ரவி, வருமான வரித்துறை துணை ஆணையர் காஞ்சனா ராணி மற்றும் நித்யானந்தினி மனோகரன் ஆகியோர் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.
இதில் வளரும் தொழில்துறையினர் விருது ரேஷ்மா ஸ்ரீஜெய்க்கும் திருமண திட்டமிடுதல் விருது ஐனஸ் நானிகிற்கும் வழங்கப்பட்டது. சிறந்த திருமண புகைப்பட கலைஞர் விருது நிக்கிதா குமாரன் என்பவருக்கும், சிறந்த திருமண திட்டமிடல் விருது நித்யா-வுக்கும், சிறந்த அலங்கார விருது வைஷ்ணவி அரவிந்திற்க்கும் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சமையல் கலைஞர் விருது கீதாவிற்கும், மெகந்திகான விருது சரண்யாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கேக் தயாரிப்பிற்கான விருது சஹானா லக்ஷ்மி என்பவருக்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பங்காருப்ரியா என்பவருக்கும், சிகை அலங்காரம் விருது விவேதா தினேஷ் மற்றும் சிறந்த அழைப்பிதழ் விருது ஹரிணிக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் தக்ஷணாமூர்த்தி கூறுகையில், "திருமண நிகழ்வுகளில் தற்போது பெண்கள் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகின்றனர். கற்பனை திறன் கொண்டு புதுமை படைத்து வருகின்றனர். திருமண தொழில் சாதனையாளர்களின் கடின உழைப்பை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது." என்றார்.

விருது வழங்கும் விழாவினை தொடர்ந்து கோவை நகரின் ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோ நடைபெற்றது. மேலும், இந்த ஆண்டின் சிறந்த மணமகள், மணமகன், சிறந்த ஜோடிகள் சிறந்த திருமணம் உள்ளிட்டவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், புதிய தொழில் முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
