திருச்சியில் கர்ப்பிணிப் பெண்ணை காலால் உதைத்துக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி: திருச்சியில் கர்ப்பிணிப் பெண்ணை காலால் உதைத்துக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கணேசா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜா - உஷா (3 மாத கார்ப்பிணி) தம்பதியினர் போலீசார் கைகாட்டி நிறுத்தாததால், ஆய்வாளர் காமராஜ் அவர்கள் வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது.

இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜா பலத்த காயமடைந்தார்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் நேற்று திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஆய்வாளர் காமராஜ் தப்பியோடிவிட்டார். இந்நிலையில் காமராஜ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை உஷாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் உயிரிழக்க காரணமான காமராஜை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.