பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கோவை: பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி பெற்ற கையோடு அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த சூழலில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் பதிவு செய்திருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பியது.
இந்நிலையில், இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

இது குறித்து அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் கூறுகையில், "இன்று 3.10 மணியளவில் சத்தம் கேட்டது. உடனடியாக வெளி வந்து பார்த்தேன். அப்போது மூன்று பேர் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அதில் ஒரு குண்டு சாலை நடுவே விழுந்து எரிந்தது. மற்றொன்று பிளக்ஸ் போர்டு மீது விழுந்தது. இதைப் பார்த்த போலீசார் அவர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அந்த மூன்று பேரும் தப்பியோடிவிட்டனர்." என்றார்
தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.