திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் : திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ, களவாணிகளைப் போல இரவில் உடைக்காமல் பகலில் நேரம் குறித்துவிட்டு வாருங்கள். கை கால்களை துண்டாக்குவோம் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் இரவில் உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும், ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகைக்கும் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து வந்த போலீசார் பாஜக நகர செயலாளர் முத்துராமன், பிரசன்னா ஆகியோர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.