திருப்பூர் அருகே தனியார் சாயப்பட்டறை நிறுவன ஊழியர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் சாயப்பட்டறை நிறுவன ஊழியர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கே. நல்லச்சாம்பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் கணேசன் (வயது 35). இவர், திருப்பூர் அங்கேரிபாளையம் அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில் இருக்கும் எஸ்.வி., டையிங் என்கிற சாயப்பட்டறையில் உள்ள கோன் வைண்டிங்கில் பணியாற்றி வந்தார். இவருடன் மதுரையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு வேலை செய்பவர்களுக்கு, சாயப்பட்டறை வளாகத்திலேயே தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கணேசனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் மேற்படி சாயப்பட்டறையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்தப் பதிவுகளில், கணேசன், ஆனந்தன் இருவரும் டையிங் நிறுவன மாடிக்கு சென்றதும், ஆனந்தன் மட்டும் இறங்கி வருவதும், கணேசன் மேலே இருந்து வராததும் தெரிய வந்தது.
இதையடுத்து, புலன் விசாரணை செய்த போலீசார் கணேசன் அடித்து கொல்லப்பட்டு, சாயப்பட்டறை நிறுவனத்திலேயே உள்ள சாம்பல் கொட்டும் குப்பையில் சுமார் 3 அடி ஆழ குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஆனந்தன் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில் ஆனந்தன், ஞாயிறன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு திங்கள்கிழமையும் வேலை பார்த்த ஆனந்தன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஆனந்தன் தான் கணேசனை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆனந்தனை தேடி வருகின்றனர். கணேசனின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.