வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளராகப் பணி புரியும் ஒருவர் பணி நிமித்தமாக நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்ல நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு செய்தியாளர்கள் வாகனங்களில் "பிரஸ்" (PRESS) என்ற ஸ்டிக்கரை பொருத்தியுள்ளனர். இதன் மூலம், குறித்த நேரத்திற்குள், குறித்த இடத்திற்கு பத்திரிக்கையாளர்களால் செல்ல முடிகிறது.
ஆனால், பத்திரிக்கையாளர்கள் அல்லாத சிலரும் அவர்களது வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அவ்வாறு, போலியாக பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்தது, போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களைப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று வழங்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு முத்திரையுடன் வழங்கப்பட்ட பிரஸ் ஸ்டிக்கர்களைப் போல போலியாக பிரஸ் ஸ்டிக்கர்களை தயாரித்து வாகனங்களில் ஒட்டியுள்ள போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் சமீபத்தில் சென்னை மற்றும் சேலத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.