குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பூர் அவினாசி நகர் பகுதியில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பூமிநாதன் என்பவர் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
இதனால், குழந்தை கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பூமிநாதன் மீது சந்தேகமடைந்து அவரைப் பிடிக்க முயன்றனர். பொதுமக்களைக் கண்டு பயந்து போன பூமிநாதன் அங்குள்ள மறைவுப் பகுதிக்குள் புகுந்துள்ளார். உடனடியாக அவரைப் பிடித்த பொதுமக்கள் பூமிநாதனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடமிருந்து பூமிநாதனை மீட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர்.
போலீசார் விசாரணையில் பூமிநாதன் குழந்தையைக் கடத்த வரவில்லை என்பதும். விளையாட்டாக கைபிடித்து இழுத்ததை தவறாக நினைத்துக்கொண்டு பொதுமக்கள் அடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.