மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருவதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேற முயன்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு வனப்பகுதியில் சிலர் புள்ளிமானை வேட்டையாடுவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த புதுக்காடு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யபட்டது. அவரிடம் தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையில் சுறுக்கு கம்பி மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தி வனத்தினுள் அடிக்கடி அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
தற்போது கைது செய்யபட்ட மூர்த்தி ஏற்கனவே வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யபட்டு சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மூர்த்தி மீது வனச்சட்டம்1882 மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம்1972 ஆகிய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கபட்டார்.