வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்விலாஸ் அத்வாலி கூறியுள்ளார்.
கோவை: வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலி கூறியுள்ளார்.
கோவை விருந்தினர் மாளிகையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
திரிபுராவில் 30 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த இடதுசாரிகளை பா.ஜ.க வீழ்த்தி இருக்கிறது.
மேகாலயாவிலும் அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும்.
தினகரன் தற்போதுள்ள அதிமுகவில் இணைந்து அமைச்சராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தினகரன் அணி, ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
இதுவரை மறைமுகமாக ஆதரவளித்து வந்த அ.தி.மு.க.,வினர் நேரடியாக ஆதரவளிக்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க , சிவசேனா இடையில் உள்ள பிரச்சினைகளை போக்க முயற்சி செய்கிறோம். இருவரும் அங்கு தனித்தனியாக போட்டியிட்டால் மக்களுக்கு பலன் இல்லாமல் போய்விடும்.
இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாடுக்குள் தான் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி,மதங்களை கடந்து வாழ வேண்டும்.
வடமாநிலங்களில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஜாட், படேல் போன்று இட ஒதுக்கீடு கேட்கும் சமூகங்களை அதில் சேர்க்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம். சாதி முறையே தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணம். தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.