கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாய், சேய் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்படும் 102 ஆம்புலன்ஸ் சேவை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் இன்று வரை செயல்படாமல் உள்ளதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாய், சேய் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்படும் 102 ஆம்புலன்ஸ் சேவை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் இன்று வரை செயல்படாமல் உள்ளதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தாய், சேய் இலவச திட்டத்தின்கீழ் பிரசவ சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்காக 102 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் ஓர் 102 வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் இல்லத்திற்கு கொண்டு விடவும். மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய், சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து மீண்டும் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் இந்த இலவச வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாகனத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் உடனடியாக தாய் சேய் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் இருந்து பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
பொள்ளாச்சியில் செயல்படாத சேவை:
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் 102 ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பித்தது முதல் கடந்த சில நாட்கள் வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. மேலும், பொள்ளாச்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இந்த சேவை வரவேற்பை பெற்றது. ஏழை, எளிய மக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரசவம் முடிந்து வீடு திரும்ப இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த சேவை கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருப்பது தாய்மார்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தாய் சேய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினர் மஞ்சுளா கூறியதாவது :- ஏழைகளாகிய நாங்கள் பணம் இல்லாத சூழலால் தான் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கிறோம். அதனால், அரசின் சேவை திட்டங்களை நாடுகிறோம். ஆனால் 102 ஆம்புலன்ஸ் வாகனம் சில நாட்களாக இல்லாததால் பொள்ளாச்சியை சுற்றியுள்ள தாய்மார்கள் வேதனையில் உள்ளனர். அரசின் திட்டம் பொது மக்களாகிய எங்களிடம் முறையாக வராததால் ஏமாற்றம்தான் மிச்சம், என்றார்.
102 இலவச அலைபேசியின் முரண்:
பலமுறை தொடர் கொண்டு ஒரு முறை பதில் தரும் 108 சேவை எண் அலுவலர்கள், பொள்ளாச்சியில் இருந்து அழைத்தால் முன்னுக்கு பின் முரணான பதில் தருகின்றனர். கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செயல்படாமல் இருக்கும் 102 சேவை குறித்து நம் கேள்விக்கு தமிழ்நாடு அரசின் இலவச தாய், சேய் சேவை மையத்தின் தொடர்பு அலுவலர்கள் பேசும் போது, முதலில் அவர்கள் சொன்ன காரணம் வண்டி சரிவர செயல்படாமல் உள்ளது என்றார். பிறகு நாம் மீண்டும் அழுத்தம் தெரிவித்ததற்கு நான் அறிந்து தான் சொல்கிறேன் என்றார். பின்னர், மீண்டும் பதில் அளித்த அலுவலர், ஓட்டுனர் பற்றாக்குறை என்றார்
முன்னுக்கு பின் முரணாக.
இது குறித்து திட்ட இயக்குனர் ரூபனை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது, பிட்னஸ் சான்றிதழுக்காக தான் வண்டி செயல்படாமல் உள்ளது. ஓட்டுனருக்காக வண்டி நிற்கவில்லை. இவ்வாறு கூறினார். மேலும், சிம்ப்ளிசிட்டியின் தகவலை உடனடியாக ஏற்று, மாற்று சேவை வாகனம் அமைத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

அரசின் திட்டங்களில் நடைபெறும் அலட்சியங்களுக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், தேவைகள் என்பது எளியோரிடம் தேங்கிதான் நிற்கிறது. ஆக தேவைகளை பூர்த்தி செய்து ஏழை, எளியோர் பயன்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.