கேரளாவில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த வாலிபரின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த வாலிபரின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனிடையே, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மேலும், மாநில அரசின் சார்பிலும் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், உயிரிழந்த மதுவின் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது, மது குறித்த தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சரிடம் மதுவின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது, மது கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஜாமினில் வெளியே வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், சமூக வலைதளங்களில் மதுவை தவறாக சித்தரிப்பவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பழங்குடி மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பழங்குடி மக்களுக்கு 200 நாட்கள் வேலைவாய்ப்பினை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. பழங்குடி மக்கள் மதுபானம் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது குறித்து ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.அக. சைலஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.