அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி : அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பான்மையான பகுதிகளில் விளைந்த தக்காளியை பறிக்க செலவு அதிகமாக இருக்கிறது. தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 2 கிடைப்பதால் பறிக்காமல் அப்படியே வயலில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டூர், புளியம்பட்டி, சிங்கலம், கதிரம்பட்டி போன்ற இடங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டும், போதிய விலை இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தக்காளியை டிராக்டர், டிராக்டராக குளத்தில் கொட்டி வருகின்றனர்.
விளைச்சல் குறைவான நேரங்களில் அதிக விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலை கிடைத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. விவசாயிகள் தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன வசதிகளையும், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முறையான பயிற்சியும் மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான், தங்கள் விளைவித்த பொருளை உரமாக்காமல், நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.