பல்லடம் அருகே மகளிர் குழு மூலம் கடனுதவி பெற்று தருவதாகக் கூறி ரூ.40 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : பல்லடம் அருகே மகளிர் குழு மூலம் கடனுதவி பெற்று தருவதாகக் கூறி ரூ.40 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி மற்றும் விஜயா. இவர்கள் இருவரும் பொள்ளாச்சியை சேர்ந்த ரூபிணிப்பிரியா என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் சுபிக்சா டிரஸ்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் கடனுதவி பெற்றுத் தருவதாக பல்லடம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்களிடம் கூறியுள்ளனர். 100-க்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து ரூ.40 லட்சத்தை முன் பணமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

பணத்தைப் பெற்று கொண்ட நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கியுள்ளனர். பொதுமக்கள் அதை வங்கியில் செலுத்திய போது உரிய பணம் இல்லை என காசோலை திரும்ப வந்துள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காமல் பொதுமக்களை அலைக்கழித்துள்ளனர் .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட 3 பெண்களும் தலைமறைவாகினர். தொடர்ந்து வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள அவர்கள் நிறுவனத்திற்குச் சென்று பார்த்த பொழுது நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்நிறுவனத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப் படுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.