சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.
கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.
காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இத்தன்பேரில் சரிதா நாயர்,அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜரான பின் வெளியே வந்த சரிதா நாயர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காற்றாலை மோசடி வழக்கு சமாதானமாக முடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர் உதவியாளர் ரவி, கணவர் ராதாகிருஷ்ணன், மற்றும் தம் மீதான வழக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி உள்ளிட்ட 19 பேர் மீது புதிய வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற மார்ச் 1ம் தேதி துவங்க உள்ளதாகவும் விசாரணை கமிசனில் அளித்த தகவல்களின் அடிப்படையில் உம்மன் சாண்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.