நீலகிரியில் இறந்து 2 நாட்கள் ஆன நிலையிலும் குட்டியின் சடலத்துக்கு அருகிலேயே தாய் யானையை பாசப்போராட்டம் நீடித்து வருகிறது.
நீலகிரி : நீலகிரியில் இறந்து 3 நாட்கள் ஆன நிலையிலும் குட்டியின் சடலத்துக்கு அருகிலேயே தாய் யானையை பாசப்போராட்டம் நீடித்து வருகிறது.
மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானையும், மற்றொரு பெண் யானையும் இறந்த குட்டி யானையின் அருகே நின்றிருந்தது. ஆண் யானை ஒன்று சற்று தூரத்தில் நின்றிருந்தது.
தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள கால்நடை மருத்துவருடன் வனத்துறையினர் 2-வது நாளாக இன்று நெல்சன் எஸ்டேட் சென்றனர். ஆனால், தாய் யானை, யாரையும் தன்னுடைய குட்டியை நெருங்க விடாமல் துரத்தியது. இதனால், வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து சரகர் காந்தன் கூறும்போது, ‘இரண்டாம் நாளாக தாய் யானை அப்பகுதியிலிருந்து விலகாமல், இறந்த குட்டியை பாதுகாத்து நிற்கிறது. இதனால், நாங்கள் திரும்பி விட்டோம்.’ என்றார்.
இறந்து 3 நாட்களாகியும் குட்டியை விட்டு பிரியாத தாய் யானையின் போராட்டம் அனைவரின் மனதையும் உருக்கும் வகையில் இருந்தது.