பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சுயநிதி தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை : பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சுயநிதி தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுயநிதி தனியார் கல்லூரி நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கலீல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சுயநிதி தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.எம். கலீல், செயலாளர் அஜித் குமார் லால் மோகன், பொருளாளர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக கூட்டமைப்பின் உறுப்பினர் நித்தியானந்தன், உறுப்பினர்கள் ராஜ்குமார், வெங்கடாச்சலம், முத்துராஜ் மற்றும் ஹேமாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் அந்த அமைப்பின் தலைவர் கலீல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் துணைவேந்தர் மீது அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆளுநர் ஆகியோரை நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம்.
பல்கலைக்கழகத்தின் முறைகேடு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆசிரியர் பணிநியமனம் மற்றும் சேர்க்கை போன்ற விவகாரங்களில் தலையீடு இருந்தது. புதிய விதிகளைப் போட்டு சுயநிதி கல்லூரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. துணைவேந்தர் கணபதி விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பங்கு என சொல்லப்படுவதால் இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.