கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.
கோவை சுப்பிரமணிய பாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் முபாரக், சுபைர், சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில், அபுதாகீர் தற்போது ஜாமீனில் உள்ளார்.
2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலனி பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்து முன்னணி சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், சசிகுமார் கொலைக்கு பின்னணியில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி குமார் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ள அதிகாரிகள், சசிகுமார் கொலை குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். புதிதாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள முபாரக், சதாம் உசேன், சுபைர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவிய அபுதாகீரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கொலை நடந்து ஓன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகுமார் கொலை வழக்கை, தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும்தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து இருப்பதால், இந்த வழக்கில் பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.