கோவை, ஜனவரி 31
கோவை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட நால்வரிடம் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்த தற்போது வந்துள்ளோம். 3 நாட்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று 6 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். 2 பேர் வரவில்லை. கோவையைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பேரிடமும், நவம்பர் மாதம் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 960-யில் 47 பேரிடமும் மதுரையில் 888-யில் 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரம் மற்றும் கடைசி வாரம் விசாரணை நடத்தப்படும்.

ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள 20 நிமிடம் ஆகும். வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் கால தாமதமாகிறது. கோவையைப் பொறுத்தவரை போலீஸ் ஆதரவாளர்கள் 21 பேரிடமும், போலீசார் 7 பேரிடமும், பொதுமக்கள் 14 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளை முன்னாள் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக உள்ளனர். ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
