உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பேருந்துக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக ஆளும் அதிமுக அரசைக்கண்டித்து நாடுமுழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், எதிர் கட்சியினர் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கட்டண உயர்வை குறைத்து தமிழக அரசின் சார்பில் இன்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது.
விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது.
புறவழிச்சாலை பேருந்துகளில் 30 கிமீ கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது. குளிர்சாதனப் பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.130ஆக குறைக்கப்படுகிறது.
மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.4 மற்றும் அதிகபட்சக் கட்டணம் ரூ.18ஆக இருக்கும். இந்த கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து கட்டணக் குறைவு காரணமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.