உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.
திருப்பூர், ஜனவரி 25
உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.
உடுமலைப்பேட்டை அருகே குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், கல்லூரி பயிலும் போது, தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை மர்ம கும்பல் ஒன்று உடுமலை பேருந்து நிலையம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கடந்த டிசம்பர் 12ந்தேதி இறுதி தீர்ப்பு வழங்கினார். அதில், முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 9ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலைக்கு எதிராக நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கிய தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
இந்த நிலையில், கோவையில் இருந்த அலமேலு நடராஜனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கோவை, திருப்பூர் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீதிபதி அலமேலு நடராஜன், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.