அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கோரி டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனவரி 24
அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கோரி டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்புக்குப் பிறகு தனித்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், தனது ஆதரவாளர்களை உள்ளாட்சித் தேர்தலுக்கும் தயார்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதனால் ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரில் தங்கள் அணி செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களுக்கென பொதுவாக ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் தங்களது மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினகரன் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.