ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையில் உள்ளதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து சொல்லாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 21
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருவதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு வீட்டிற்குச் செல்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
சரத்பிரபு-வின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தனிக்கட்சி யார் வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும். தினகரன் தனிக்கட்சி துவங்குவதில் அவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவரின் நிலை என்னவென்று அறிய முடிகிறது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாக உள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.9 கோடி இழப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.