கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.
கோவை, ஜனவரி 21
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.

கோவையில் முதன்முறையாக வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற இருக்கின்றது.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு வாடிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவையை அடுத்த செட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம் கார் பவுண்டேசன் இணைந்து நடத்துகின்றனர்.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இதற்காக இடம் தயாராகி வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தற்போது வரை 750 காளை மாடுகளும் , 550 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து அமைச்சர் கூறுகையில், "தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரையில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
கடந்தாண்டு அனைத்து மாவட்டத்திலும் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுக்காக குரல் கொடுத்தனர். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு நடந்தது.
கோவையில் கடந்தாண்டே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரிக்கை எழுந்தது.
இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கர் அமைப்பும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது" என்றார்.