நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.
நீலகிரி, ஜனவரி 21
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரளவிற்குப் பருவ மழை பெய்திருந்தாலும், உறை பனியின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புல் வெளிகள் மற்றும் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு வருகிறது.
இதனால், காட்டுத்தீ ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. இதை பொருட்படுத்தாத ஒரு சிலர் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் தீ வைத்துச் சென்று விடுவதால் வனப்பகுதியில் தீ ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.