உதகை அருகேயுள்ள கிராமங்களில் பயிர்கள் மற்றும் நடைப்பாதைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால், அச்சமடைந்துள்ள அப்பகுதி கிராம மக்கள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர் .
நீலகிரி, ஜனவரி 18
உதகை அருகேயுள்ள கிராமங்களில் பயிர்கள் மற்றும் நடைப்பாதைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால், அச்சமடைந்துள்ள அப்பகுதி கிராம மக்கள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர் .
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக புலி, கரடி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், குடியிருப்புகளையும், நடைப்பாதைகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் உதகையை அடுத்த உல்லத்தி மற்றும் கடநாடு ஊராட்சிக்குட்ப்பட்ட சக்திநகர், கவரட்டி, மல்லிக்கொரை, கீழ் மல்லிக்கொரை, காவிலோரை, ஒடயரட்டி, பெந்தட்டி, ஆலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்ட கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

கீழ் மல்லிக்கொரை கிராமத்தில் இன்று யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் அக்கிராமத்தில் உள்ள நடைப்பாதைகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அக்கிராமத்தில் இருந்து இரண்டு யானைகளையும் மசினகுடி ஊராட்சிக்குட்ப்பட்ட சொக்கநள்ளி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதாக வனத்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.