புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவலை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.
கோவை, ஜனவரி 17
புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவலை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.
கோத்தகிரி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கச் சாலை மார்க்கமாக வந்த அம்மா அ.தி.மு.க. அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அன்னூரில் பட்டாசு வெடித்து மேள தாளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் டிடிவி தினகரன் பேசுகையில், ஏழை, எளிய சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மானியம் அரசாலும் வழங்கப்பட்டது. மத்திய அரசு, சிறுபான்மை இன மக்களின், மிகப்பெரிய விருப்பமான ஹஜ் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தடை செய்யாமல் திரும்ப மானியத்தை வழங்க வேண்டும். என்றார்.
நாளை புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், புதிய கட்சி தொடங்குவதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. தொலைக்காட்சிகளில்தான் விவாதம் நடைபெற்றன. கட்சியை ஆளும் துரோகிகளின் கையில் தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. 90 சதவிகித தொண்டர்கள் தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால்தான் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றேன். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்பதற்காக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு, அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்க உள்ளேன். அதைச்செய்வோம், இதைச்செய்வோம் எனச் சொல்லவில்லை. ஒரு வாரம் பொறுத்திருங்கள் அறிவிப்பு வரும்.
ரஜினி, கமல் அரசியல் பயணம் குறித்து மக்கள்தான் முடிவு எடுப்பார்கள். தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும்போது இந்தத் திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார்.
மேலும், டிடிவி பாஸ்கரன் அதிமுக தொண்டர்களை இணைப்பது குறித்து கேட்டதற்கு தனக்கு தெரியாது என டிடிவி தினகரன் பதிலளித்தார்.