கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.
கோவை, ஜனவரி 15
கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பீளமேடு பகுதியில் நயம் அமைப்பு சார்பில் தமிழர் திருவிழா என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உறியடித்தல், இளவட்டக் கல் தூக்குதல், வழுக்குமரம், பானையில் தண்ணீர் சுமந்து செல்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், குழந்தைகள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் உற்சாகமாகப் பயணம் செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.

கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நகரத்தில் முதல் முறையாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினரும் நமது கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இக்கலைகள் அழியாமல் இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
இந்ந நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டு இருப்பதாகவும், பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கங்கா தெரிவித்துள்ளார்.