கோவை ஏ.டி.எம் கொள்ளையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
கோவை, ஜனவரி 13
கோவை ஏ.டி.எம் கொள்ளையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
பீளமேடு அருகே உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் மூன்று லட்சத்தை கொள்ளையடித்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் புகுந்து கைவரிசை காட்டிய அந்த கும்பல் மொத்தமாக ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதைத்தொடர்ந்து இந்தக் கொள்ளையர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து ஆணையர் K.பெரியய்யா உத்தரவிட்டார்.
தனிப்படையினரின் விசாரணையின் போது கொள்ளையர்கள் நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூர் தப்பிச்செல்ல இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்த் அந்த மாவட்டங்களின் போலீசாருடன் இணைந்து செயல்பட்ட கோவை மாநகர போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஜீல்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், முபாரக், அமீன் மற்றும் சுபேர் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் 8 பேரும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ. 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ. 27 லட்சத்துடன் தலைமறைவான கும்பலின் தலைவன் அஸ்லாம் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகியோரை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படையினர் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் முகாமிட்டு இருந்தனர். ஒரு வாரமாக முகாமிட்டு இருந்தும், இருவரையும் பிடிக்க முடியாததால் தனிப்படையினர் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கோவை திரும்பினர்.