பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
கோவை, ஜனவரி 12
பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவரை, விமான நிலையத்தில் நாதஸ்வரம், மத்தளம் வாத்தியங்களுடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, வரும் 16-ம் தேதி நீலகரி வரும் டிடிவி தினகரன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொங்கல் விழா தருணத்தில் நல்லவர்கள் பற்றியும், நல்லதைப் பற்றி மட்டும் சிந்திப்போம், என்றார்.
மேலும், சிவகாசி பட்டாசு தொழில் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். சிவகாசி பட்டாசு தொழில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதாகவும், தீர்ப்பு வந்த பின்னர், மூத்த வழக்கறிஞர்கள் கொண்டு தமிழக அரசு வழக்கை நடத்தி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை சர்வதேச விமான நிலையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர், உறியடித்து அங்கு கூடியிருந்த மக்களை அவர் உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த அவர், சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.