சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 9
சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அடுத்த நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (54). இவரது சகோதரி பாக்கியம் (74). பாக்கியத்தின் மகள் சாந்தி. மணிகண்டன் தனது சகோதரி பாக்கியத்துடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் நடத்த பாக்கியத்திடம் மணிகண்டன் 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை பாக்கியம் தனது சகோதரனிடம் கேட்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக பணம் தர முடியாத சூழலில் நேற்று (திங்களன்று) இரவு மணிகண்டன் தேனில் விஷம் கலந்து பாக்கியம், அவரது மகள் சாந்தி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், அவரும், சாந்தியும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழில் நஷ்டம் காரணமாக தனது சகோதரி மகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.