இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, ஜனவரி 8
இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகரில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி இன்று காலை அவினாசி சாலை அண்ணா சிக்னல் பகுதியில் நடைபெற்றது.

கங்கா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கங்கா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 165 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவினாசி சாலையில் 10 இடங்களில் சாலை பாதுகாப்பு பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்ற மாணவர்கள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முன்னதாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
கோவை மாநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 300 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டிற்கு 1 லட்சம் புதிய வாகனங்கள் கோவையில் பதிவு செய்யப்படும் சூழலில் சாலை விரிவாக்கப்படாத சூழல் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்.

ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்குபவர்களே அதிக அளவில் உள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் உபயோகித்துக் கொண்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.
மாநகரில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார், கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ். ராஜசேகரன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
