கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய இம்முகாம் பிப்.20 ம் தேதி வரை 48நாட்கள் நடைபெற உள்ளது.
கோவை, ஜனவரி 04:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த முகாம் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில் மற்றும் திரு மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2004- 2005, 2005- 2006, 2011- 2012 ஆகிய நான்கு ஆண்டுகள் முதுமலையில் இந்த முகாம் நடைபெற்றது.

பின்னர், மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் லாரிகளில் யானைகளை கொண்டு செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு இன்மையைக் கருத்தில் கொண்டு 2012- 2013 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நல முகாமை தொடங்கியது.

2013- 2014, 2014- 2015, 2015- 2016- 2017 ஆக 5 ஆண்டுகள் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் நடைபெற்றது. அதன்படி 10-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான யானைகள் சிறப்பு நல வாழ்வு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.

இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த 31 யானைகளும், புதுச்சேரியைச் சேர்ந்த 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் இதில் பங்கேற்றுள்ளன. முகாம் வளாகத்தில் சமையல் அறை, சமையல் கூடம், தீவன மேடை மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

யானைகள் ஷவரில் குளிப்பதற்காக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் உள்ளே நுழையாமல் இருக்க சோலார் மின் வேலிகள், தொங்கும் மின் வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லி மலை வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வரும் பாதையை எளிதில் கண்டறிவதற்காக மலையின் அடிவாரப்பகுதி ஜே.சி.பி.மூலம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, இந்த விழாவின் தொடங்க நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன், இந்து அறநிலையத் துறை ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.